Inspiration

Children's Special

அன்பு செல்வங்களே! எப்படி இருக்கீங்க?, பத்திரமா இருக்கீங்க என்று நம்புகிறேன்!. ஆமாம், இயேசப்பா அவருடைய பிள்ளைகளாகிய நம்மை தமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருப்பதினால் நாம் பத்திரமாய் வாழ்வது நிச்சயம். சரி கதைக்குப் போகலாமா? ஒரு சிறிய ஊர். அதிலே ஒரு சிறிய குடும்பம், கணவன் இல்லாத அக்குடும்பத்தை தாய் வெகு சிரமத்துடன் நடத்தி வந்தாள், அவர்களுக்கு ஜிங்கிள், ரிங்கிள் என்று இரு குட்டிப் பிள்ளைகள் உண்டு. அவர்கள் வேறு மாநிலத்திலிருந்து வந்தபடியால் அவர்களுக்கு நம் ஊரைப்பற்றி எதுவும் அதிகம் தெரியாது. ஆகவே பள்ளி விட்டால் வீடு, பின்பு டியூசன் சென்று வீட்டிலே தான் இருக்க வேண்டும். குடும்பத் தேவையின் காரணமாக அம்மா வேலைக்கு போய்விட்டு பிள்ளைகள் வரும் நேரம்தான் வருவார்கள். Sunday என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. Sunday School செல்வது! அங்கு சொல்லிக் கொடுக்கும் கதை, வசனம், போதனைகள் தான் அவர்களுக்கு ஆறுதல் ரிங்கிளுக்கு ஊரைச் சுற்றிப் பார்க்க ரொம்ப ஆசை. எனவே யாரிடமும் சொல்லாமல் கால்போன போக்கில் வேடிக்கை பார்த்துக்கொண்டே எங்கேயோ போய்விட்டாள். நேரமும் ஆகி இருட்டிவிட்டது. ஒருவர் அவளிடம் வந்து, பாப்பா ஏன் தனியே நிற்கிறாய். வா உங்க வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன். என் பைக்கில் ஏறிக்கொள் என்றார். இவளும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சற்று ஆறுதலுடன் பைக்கில் ஏறினாள். அவர் நல்லவர் போல ஜீஸ் வாங்கிக் கொடுத்து, வேறு ஊருக்குக் கொண்டுபோய் சிறுவர்களை வைத்து வித்தை காட்டும் இடத்தில் விற்றுவிட்டார். அங்கே வித்தைகளைக் கற்றுக் கொடுக்க, அடித்து சாப்பாடு கொடுக்காமல் ரிங்கிளை துன்புறுத்தினார்கள், கஷ்டங்கள் தாங்க முடியாமல் ரிங்கிள் அழுதாள். இயேசப்பாவிடம் ஜெபம் பண்ணினாள்,Sunday School பிள்ளைகள் அனைவரும் ரிங்கிளுக்காக ஜெபித்தனர். பல மாதங்களுக்குப்பின் ஒரு ஊரில் வித்தை நடந்து கொண்டிருந்தபோது அவர்கள் ஊரிலிருந்து ஒரு பெரியவர் ரிங்கிளைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டார். பின் ஊர்த்தலைவரிடம் பேசி அவளை மீட்டுக் கொண்டு வந்து வீட்டில் விட்டார். குடும்பத்தில் அளவில்லா மகிழ்ச்சி! ரிங்கிளும் தன் தவறை உணர்ந்தாள். எல்லோருடைய ஜெபத்தையும் கேட்டு இயேசப்பாதான் தன்னைக் காப்பாற்றினார் என்று நன்றியோடு அவரைத் துதித்தாள். அன்புச்செல்வங்களே! அம்மா அப்பாவுக்கு கீழ்ப்படிய வேண்டும். பெற்றோருடைய கட்டளைகளுக்கு மாறாக நடக்கக்கூடாது. முன் பின் தெரியாதவர்கள் எதையாவது சாப்பிட வாங்கிக்கொடுத்தாலோ, கூப்பிட்டாலோ சென்று விடக்கூடாது. பெற்றோர் செல்லக்கூடாது என்று சொல்லும் இடங்களுக்கு கட்டாயம் செல்லக்கூடாது. ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படிந்தால் உங்கள் வாழ்வின் மேல்படிக்கு நீங்கள் வருவது உறுதி Ok, Bye! ஜெபிப்போமா? அன்புள்ள இயேசப்பா அம்மா, அப்பாவுக்கு கீழ்படிந்து நடக்கும் குணத்தை எனக்கு தாங்க. கண்மணியைப் போல என்னை காத்துக் கொள்ளுங்க பிதாவே ஆமென்! மனப்பாட வசனம் கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார். சங் 121:7.